அலியான்ஸ் லங்கா, வீதிகளில் உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் “Restart the Heart” என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளது!

13

“உங்களுக்கு பெறுமதிக்கபற்றதைப் பாதுகாத்தல்” என்பதன் மீதான தனது அர்ப்பணிப்பினை உண்மையில் நிலைநாட்டும் வகையில், இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகளாவிய Allianz SE குழுமத்தின் உறுப்பு நிறுவனமுமான அலியான்ஸ் லங்கா, “Restart the Heart” என்ற தனது பிரச்சாரத்தை 2024 மே 11 அன்று ஆரம்பித்துள்ளது. CPR (மீளுயிர்ப்புச் சுவாச முதலுதவி) போன்ற அவசர சிகிச்சை தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வை முன்னெடுக்கும் ஒரு தொடர் முயற்சியாக திட்டமிடப்பட்டுள்ள, “Restart the Heart” என்ற பிரச்சாரத்தின் முதலாவது நிகழ்வு வீதிகளில் கௌரவிக்கப்பட வேண்டிய கதாநாயகர்களாக, அல்லும்பகலும் உழைக்கின்ற முச்சக்கரவண்டி சாரதிகள் மீது கவனம் செலுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.            

நாட்டில் அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய போக்குவரத்து சேவையின் முதுகெலும்பாகத் திகழும் முச்சக்கரவண்டி சாரதிகள் மீது அலியான்ஸ் லங்கா கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் வீதிகள் எங்கும் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகளின் போது வீதிகளில் உயிர்களைக் காக்கும் பொறுப்புக்கு மிகவும் உகந்தவர்கள். ஒருவருக்கு சுவாசம் தடைப்படும் போது அல்லது இருதயத் துடிப்பு நின்று விடும் பட்சத்தில், முறையாக பின்பற்றப்படுமிடத்தில் CPR அல்லது Cardiopulmonary Resuscitation (மீளுயிர்ப்புச் சுவாச முதலுதவி) என்பது மிகவும் பயன்மிக்க மற்றும் இலகுவாக மேற்கொள்ளக்கூடிய உயிர்க்காப்பு வழிமுறைகளில் ஒன்றாகும். வீதி விபத்துக்களின் போது அல்லது வீதியில் மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் இது மிகவும் பொதுவான ஒன்றாகும். ஆகவே முச்சக்கரவண்டி சாரதிகள் போன்று எமது வீதிகளில் பெரும்பாலும் நேரத்தைச் செலவிடுகின்றவர்களுக்கு CPR தொடர்பான அறிவையும், பயிற்சியையும் வழங்குவதன் மூலமாக, அவர்களது திறனை மேம்படுத்தி, அவசர வேளைகளில் உயிர்களைக் காக்கும் வாய்ப்பினையும் அதிகரிக்கலாம்.          

இதற்கு அமைவாக, Resuscitation Council – College of Anaesthesiologists & Intensivists மற்றும் சர்வதேச அரிமாக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து அலியான்ஸ் லங்கா நடாத்திய நிகழ்வில் கோட்டை முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்க அங்கத்தவர்கள் பங்குபற்றினர். “Restart the Heart” நிகழ்வின் அங்குரார்ப்பண அமர்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதுடன், திடீரென மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் உயிர்களைக் காக்கக்கூடிய CPR, ஏனைய நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி செயலமர்வுகளில் 70 க்கும் மேற்பட்டோர் பெரும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.   

அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி கசுன் யடவர அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “இது முதற்படியாக அமைந்துள்ளதுடன், வெறும் ஆரம்பம் மட்டுமே. “Restart the Heart” என்பது மக்களுக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள ஒரு பொதுச் சேவை நிகழ்ச்சித்திட்டமாக அமைந்துள்ளதுடன், இலங்கையில் வீதிகளில் பாதுகாப்பினை உறுதிசெய்வதே இம்முயற்சியின் பிரதான நோக்கம். எதிர்காலங்களில் எம்மால் முடிந்த வரைக்கும் ஏனைய குழுக்களையும் இது எட்டும் வரையில் இந்த முயற்சியை நாடெங்கிலும் விரிவுபடுத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிப்பற்றது என்ற எமது நம்பிக்கையே இதற்கான காரணம்!” என்று குறிப்பிட்டார்.

அலியான்ஸ் லங்கா என்ற பொதுவான பெயரில் அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மூனிச் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும். Interbrand மற்றும் Brand Finance ஆகியவற்றால் “உலகின் முதற் தர காப்புறுதி வர்த்தகநாமம்” என்ற உலகளாவிய அங்கீகாரத்தை அலியான்ஸ் சம்பாதித்துள்ளது. அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் வலுவான மூலதனமயம், உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் வணிக ஆற்றல் ஆகியன ஒன்றிணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான வலுவான சூத்திரமாகக் காணப்படுகின்றன. மகத்துவத்தின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாப்பான மற்றும் சுபீட்சத்துடனான எதிர்காலத்தை வளர்த்து, தனது வாடிக்கையாளர்களின் பரந்துபட்ட தேவைகளை அலியான்ஸ் லங்கா நிறைவேற்றி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here